Wednesday, December 31, 2008

பாடல் -6

மானே! நீ நென்னலை நாளவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ!
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்!

பொருள்:

எழுப்புபவர்:

மான்விழி போன்ற மருட்சியுடைய விழிகளையுடையவளே! "நாளைக்கு நானே வந்து உங்களையெல்லாம் எழுப்புவேன்" என்று நேற்று நீ சொன்னாயே! உனக்கு வெட்கமில்லையா? அந்தச் சொல், எந்தத் திசையில் போயிற்று என்பதைச் சொல்! இன்னும் பொழுது விடியவில்லையா? வானுலகத்தாரும் நிலவுலகத்தாரும் பிறவுலகத்தாரும் அறிதற்கரியவன் இறைவன். அவனுடைய மேலான கழலணிந்த திருவடிகள் எளியவர்களாகிய நமக்குத் தானாகவே வந்து நமைக்காத்து ஆட்கொண்டு அருள்வன. அந்தத் திருவடிகளைப் பாடிவந்த எங்களிடம் வாய்திறந்து பேசினாயில்லை; உன் உடல் உருகினாயில்லை. உனக்குத்தான் இந்நிலை பொருந்தும். எங்களுக்கும் மற்றவர்களுக்கும் தலைவனாகிய சிவபெருமானைப் பாடுவாயாக.

No comments:

Post a Comment