Wednesday, December 31, 2008

பாடல் -4

ஒண்ணித் திலநகையாய்! இன்னும் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ?
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே!
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்!

பொருள்:

எழுப்புபவர்:

ஒளி பொருந்திய முத்தினைப் போன்ற பற்களை உடையவளே! இன்னும் பொழுது விடியவில்லையா?

உள்ளே இருப்பவள்:

அழகிய கிளிபோல மொழி பேசும் நம் தோழியர் அனைவரும் வந்து விட்டனரோ?

எழுப்புபவர்:

எண்ணிப் பார்த்து உள்ளபடி சொல்கின்றோம்; ஆனால் நேரமாகும். அதுவரையும் கண் உறங்கிக் காலத்தை வீணாக்காதே! தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதமானவனை, மறகள் பேசுகின்ற மேலான பொருளை, கண்களுக்கு இனியவனைப் பாடி மனம் கசிந்து, உள்ளம் உடைந்து நின்று உருகுகின்றோம். ஆதலால் நாங்கள் எண்ணிக் கூற இயலாதவர்களானோம். நீயே வந்து எண்ணிக்கொள்! எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய் உறங்கு!

No comments:

Post a Comment