Wednesday, December 31, 2008

பாடல் -1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்!
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே! என்னே!
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!

பொருள்:

எழுப்புபவர்:

ஒளி பொருந்திய அகன்ற கண்களையுடைய பெண்ணே! தோற்றமும் இறுதியும் இல்லாதவன் சிவபெருமான்; அரிய பேரொளியானவன். அவனைப் பாடுகின்றோம்; அந்தப் பாடலைக் கேட்டபின்னும் நீ உறங்குகின்றாயோ? உன் செவி என்ன, கேளாத வன்செவியா? தேவதேவனை, கழலணிந்த அவன் திருவடிகளை நாங்கள் வாழ்த்துகின்ற ஒலி வீதியெல்லாம் நிறைந்தது. இதைக் கேட்ட ஒருத்தி பக்தி மேலீட்டால் விம்மி விம்மி மெய்ம்மறந்தாள்; மலர்ப் படுக்கையிலிருந்து புரண்டு விழுந்தாள்; எதற்கும் பயன்படாதவள் போல் நினைவற்றுக் கிடக்கிறாள்! அவள் அல்லவா இறைவனிடம் அன்புடையவள்! எங்கள் தோழியாகிய நீயோ உறங்குகின்றாய். என்னே உன் தன்மை!

No comments:

Post a Comment