Wednesday, December 31, 2008

பாடல் -3

முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந் தெதிர்எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்!
பத்துடையீர்! ஈசன் பழவடியீர்! பாங்குடையீர்,
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ?
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!

பொருள்:

எழுப்புபவர்:

முத்தினைப் போன்ற வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் நீ, எங்களுக்கு முன் எழுந்து எங்கள் எதிரே வந்து "என் அப்பனே! ஆனந்தனே! அமுதனே!" என்று வாயூறி இனிக்க இனிக்க இறைவனைப் புகழ்வாய்! எழுந்து வந்து உன் வாசற் கதவைத் திற!

உள்ளே இருப்பவள்:

நீங்கள் இறைவனிடம் பற்றுடையவர்கள்; இறைவனுடைய பழைய அடியார்கள்; அவனைப் புகழும் முறைமை பெற்றவர்கள். நான் புதிய அடிமை! உங்கள் பெருமையால் என்னுடைய சிறுமையை நீக்கி ஆட்கொள்ளலாகாதோ?

எழுப்புபவர்:

உன் அன்புடைமை எங்களுக்குத் தெரியாதா? அதை எல்லோரும் அறிவோம். அழகிய மனமுடையவர்கள் நம் சிவபெருமானைப் பாடாமலிருப்பரோ? உன்னை எழுப்ப வந்தோமே நாங்கள், எங்களுக்கு இவ்வளவு பேச்சும் வேண்டியதுதான்.

No comments:

Post a Comment