Wednesday, December 31, 2008

பாடல் -2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்! நேரிழையீர்!
சீசீ இவையுஞ் சிலவோ? விளையாடி
ஏசும் இடமீதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய்!

பொருள்:

எழுப்புபவர்:

சிறந்த அணிகலன்களையுடைய பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும்போதெல்லாம் "யாவும் கடந்து நிற்கின்ற ஒளிவடிவமாகிய இறைவனுக்கு என் அன்பு" என்று சொல்லுவாய்! அந்த அன்பை இந்த மலர்ப் படுக்கையின் மீது எப்போது வைத்தாய்!

உள்ளே இருப்பவள்:

சிறந்த அணிகலன்களை நான் மட்டும் அணிந்திருக்கவில்லை! நீங்களும்தான் அணிந்திருக்கிறீர்கள், தோழிகளே! சீ! சீ! நீங்கள் பேசிய இவை கொஞ்சமோ? விளையாடி ஏசிக் கொள்ளும் இடம் இதுவா?

எழுப்புபவர்:

தேவர்களும் வணங்குதற்கு அரியதாகி, அவர்கள் தங்கள் நிலைமைக்கு இரங்கிக் கூச்சப்படுகின்றவாறு உள்ளவை அவன் திருவடிகள். ஒளிமயமான அவன், அந்தத் திருவடிகள் இந்த மண்ணில் படும்படி வந்தருளி நாம் காணுமாறு தந்தருள்வான். அவன் சிவலோகன், திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருப்பவன். நாம் யார்? அவன் அடிமைகளே!

No comments:

Post a Comment